பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வரும் 11ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, வரும் ஞாயிறு துவங்கி 28 நாட்களுக்கு மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார். உலக பிரசித்திப்பெற்ற சக்தி ஸ்தலங்களில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சிறப்பானது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கும், எல்லையில்லா அன்பு கொண்டவள் சமயபுரத்தாள். அதற்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குவியும் பக்தர்களே அத்தாட்சி. ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி வார ஞாயிற்றுகிழமையில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாத முதல்வார செவ்வாய்கிழமையில் சித்திரைத்தேரோட்டமும் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 11ம் தேதி, பூச்சொரிதல் விழா துவங்குகிறது. அன்று அதிகாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கிறது. காலை 8.19 மணிக்குமேல் 10.01 மணிக்குள், தேவஸ்தானம் சார்பில் பூச்சொரிதல் நடக்கிறது. முன்னதாக, கோவில் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், பூத்தட்டுகள், பூக்கூடைகள் ஏந்தி, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று, மேஷ லக்னத்தில் காப்பு கட்டி, அம்மனுக்கு பூச்சொரிதல் (புஷ்பாபிஷேகம்) செய்யப்படுகிறது.
பச்சைப்பட்டினி விரதம்: உலக நன்மைக்காக, மாசி மாத கடைசி ஞாயிற்றுகிழமையில் இருந்து, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை வரை, தொடர்ந்து 28 நாட்களுக்கு மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது வழக்கம். தன்னை நாடும் மக்களுக்காக மாரியம்மன் மேற்கொள்ளும் விரதத்தை பக்தர்கள் போற்றும்விதத்தில், அம்மன் மீது பூத்தூவி வழிபடும் வழக்கமே, காலப்போக்கில் பூச்சொரிதல் விழாவாக மாறியது. மாரியம்மன் விரதத்தின்போது, வழக்கமாக செய்யப்படும் தளிகை நைவேத்தியத்துக்கு பதிலாக துள்ளுமாவு, இளநீர், நீர்மோர், பானகம், கரும்பு போன்றவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. அம்மனின் விரதத்தை போற்றும்வகையில், ஞாயிற்றுகிழமைகளில் வீடுகளில் "குளுமை என்ற பெயரில், இளநீர், நீர்மோர், பானகம் வைத்து படைத்து, ஊர்மக்களுக்கு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. விரதத்தின்போது அம்மன் உக்கிரம் அடையக்கூடாது என்பதுக்காக "குளுமை படைக்கப்படுகிறது என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.