பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமபாடியில் சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத ஸ்வாமி கோவில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப்பட்டதும், திருமால், இந்திரன், ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது இக்கோவில். இறைவன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றதுடன், ஐயடிகள் காடவர் கோனால் பதிகம் பாடப்பெற்ற பெருமை மிக்க இத்தலத்து சிவபெருமான், வஜ்ரதம்பேஸ்வரர், மழுவாடி ஈசன், திருமழுவாடி மகாதேவன், என்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக வைகாசி விசாக நாளில் மழுவேந்தி நடனமாடி காட்சியளித்த இத்தலத்தில் தான், நந்தியெம்பெருமான் சுயஸாம்பிகா தேவியுடன் திருமணம் கொண்டருளிய புராண சிறப்பு மிக்கதாகும். பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாரம்பரிய பெருமை மிக்க இக்கோவிலின் மாசி மக பெருந்திருவிழா, கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஆதிஷே வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்டவற்றில், இறைவனும் இறைவியும் நாள்தோறும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். கடந்த 4ம் தேதி ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை 11.30 மணிக்கு துவங்கி நான்கு ராஜவீதிகளிலும் நடந்தது. தேரோட்ட துவக்க விழாவில் அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் சீனிவாசன், திருமழபாடி பஞ்சாயத்து தலைவர் கர்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வைத்தியநாத ஸ்வாமியும், சுந்தராம்பிகையும் நான்கு ராஜவீதிகளிலும் எழுந்தருளினர்.