கோவிந்தா கோஷம் விண்ணதிர கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2019 01:04
பரமக்குடி, : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட கோயிலுக்கு திரும்பினார்.
பரமக்குடி சவுராஷ்ட்ர பிராம்மண மகாஜனங்களுக்கு பாத்தியமானசுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏப்.,14 ல் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஏப்., 19 அதிகாலை3:25 மணிக்கு அழகர் மஞ்சள் பட்டுடுத்தி பூப்பல்லக்கில் வைகைஆற்றில் இறங்கினார். தொடர்ந்து காலை 9:15 மணிக்கு குதிரைவாகனத்தில் எழுந்தருளிய அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள்மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர்.
மேலும் சஷே வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோட்சனமும், விடிய, விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள்பாலித்தர். பின்னர் கருட வாகனம், பட்டுப்பல்லக்கில் ராஜதிருக்கோலத்தில் எழுந்தருளினார். நேற்று காலை 7:00 மணிக்கு மீண்டும் கள்ளழகர் அலங்காரத்தில் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் சூடி வைகை ஆற்றில் இருந்து கோயிலை நோக்கி புறப்பட்டார். அப்போது வெட்டிவேர், மல்லிகை, கனகாம்பர பந்தலிட்ட பூப்பல்லக்கில் வீதிவலம் வந்து, கருப்பண்ணசாமியிடம் உத்தரவு பெற்று சிறப்புதீபாராதனைகளுடன் மீண்டும் கோயிலுக்கு மாலை 6:00 மணிக்கு திரும்பினார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.