கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவிலில் சிமகப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. ஆன்மாக்கள் உய்வு பெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்குக் காரணமாகிய ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்துத் தந்து அதனையே சிவலிங்க மூர்த்தியாக அமைத்து தம்மை தாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவில். இங்கு 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாகி அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதிதியானவர் மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலம் ஆகும். இத்தகைய சிறப்புடைய இக்கோவில் மூலமே 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாமகத்திருவிழா நடந்து வருகிறது. அத்துடன் ஆண்டுதோறும் நடந்து வரும் மாசிமகப்பெருந்திருவிழா இக்கோவிலை முன்னிறுத்தியே நடக்கிறது. இத்தகைய சிறப்புடைய கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமக விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு தனித்தனி தேரோட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன், ஒப்பிலியப்பன் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் ராயா.கோவிந்தராஜன் உள்ளிட்ட பல பிரமுகர்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். காலை 10.30 மணியளவில் தேர்கள் நிலையை வந்தடைந்தன. சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று 7 ம் தேதி கும்பகோணம் மகாமக குளத்தில் காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.