பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
12:04
பொன்னேரி: கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு, அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது.
பொன்னேரி, திருவாயர்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, 19ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக, காலை, 7:30 மணிக்கு நாச்சியார் திருக்கோயில், இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை ஆகிய உற்சவங்கள் வெகு விமரிசை யாக நடைபெற்றன.நள்ளிரவு துவங்கி, நேற்று அதிகாலை வரை, அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது.நள்ளிரவு, 12:00 மணிக்கு, கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், மாடவீதிகள் வழியாக வலம் வந்து ஹரிஹரன் பஜார் வீதியின் தேரடியில் நிலை கொண்டார். அதன் மறுமுனையில் பஞ்ச மூர்த்திகளுடன் சேஷ வாகனத்தில் வந்த அகத்தீஸ்வரர், அலங்கார விளக்குகளுடன் வீற்றிருந்தார்.ஆனந்தவல்லி தாயார், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை பாலசுப்ரமணியன் ஆகியோர் தனித்தனி வாகனங்களில் வீற்றிருந்தனர்.அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள், மாலைகள் மங்கள இசையுடன் மாற்றப்பட்டு, தீபாராதனை கள் காட்டப்பட்டன.நேற்று, அதிகாலை, 5:30 மணிக்கு, அகத்தீஸ்வரர், கரிகிருஷ்ண பெருமாள் ஆகியோர், ஒரே சமயத்தில், அரிஅரன் பஜார் வீதியில் உள்ள கோதண்ட ராமன் சன்னதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்தனர்.அரியும், அரனும் சந்தித்தப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணா என கோஷங்களை எழுப்பி, இரண்டு சுவாமிகளையும், ஒருசேர வணங்கி வழிபட்டனர்.தொடர்ந்து, பஞ்சமூர்த்தி களுடன் அகத்தீஸ்வரரும், பெருமாளும் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.