பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
12:04
ஓசூர்: ஓசூர் அருகே நடந்த, கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்களை முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்து, பூசாரி ஆசி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில், பழமையான தர்மராஜ சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 380வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 15ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபாராதனை, பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மதியம், தர்மராஜ சுவாமி தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. இந்த விழாவில் பங்கேற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்களை, முறம் மற்றும் துடைப்பத்தால் கோவில் பூசாரி அடித்தபடி ஓடினார். பக்தர்கள் அனைவரும் கூட்டத்தில் முண்டியடித்து, பூசாரியிடம் அடி வாங்கி, ஆசி பெற்றனர். இதன் மூலம், பேய், பிசாசு, காத்து, கருப்பு, பில்லி, சூனியம் விலகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி, இன்று அக்னி குண்ட பிரவேசம், பூங்கரகம், வாண வேடிக்கை நடக்கிறது.