பதிவு செய்த நாள்
08
மார்
2012
10:03
நாகர்கோவில்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனால், திருவனந்தபுரம் நகரம் புகை மூட்டத்தில் சிக்கியது. மதுரையை எரித்த கண்ணகி, கொடுங்கல்லூர் செல்லும் வழியில், திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் தங்கினார். அன்று இரவு, இப்பகுதி முதியவர் ஒருவர் கனவில் வந்து தனக்கு, இங்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கிள்ளியாற்றின் கரையில் கோவில் கட்டப்பட்டு, இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் என, பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி கொண்டிருக்கிறது. இங்கு, மாசி மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தில், அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தி, பொங்கல் விழா தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாவது நாளில் பூரம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணையும் நாளில் பொங்கல் வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா, பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக, ஆயிரக்கணக்கான பெண்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வந்து திருவனந்தபுரத்தில் முகாமிட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, பலத்த மழை பெய்தது. எனினும் பெண்கள், அங்கேயே மழையில் நனைந்தபடி தங்கியிருந்தனர். காலை 10.30 மணிக்கு கோவிலின் முன்புறம் உள்ள அடுப்பில், கோவில் மேல்சாந்தி தீ வளர்த்ததும், ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, பெண்கள் அனைவரும் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி 4 கி.மீ., சுற்றளவில் ரோடுகளிலும், வீடுகளிலும், பஸ் நிறுத்தங்களிலும் பெண்கள் பொங்கலிட்டனர். இதனால், திருவனந்தபுரம் நகரம் புகைமூட்டத்தில் சிக்கியது. மாலையில், கோவிலில் இருந்து தீர்த்தத்துடன் புறப்பட்ட பூசாரிகள், பொங்கல் நிவேத்யத்தில் தீர்த்தம் தெளித்து நிவேத்யம் நடத்தினர். இந்த நேரத்தில், ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவப்பட்டது. பொங்கல் விழாவையொட்டி, சிறுவர் சிறுமியரை பல வேடங்களில் அலங்கரித்து, கோவிலுக்கு அழைத்து செல்லும் தாலப்பொலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று, ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.