தேவனாம்பட்டினம் கடற்கரையில் உலகளந்த பெருமாள் இன்று தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2012 10:03
கடலூர் :கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடந்த மாசிமகத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் மாசிமகத் திருவிழா நடக்கிறது. நேற்று கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து அதிகாலை முதல் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி, டிராக்டர், டாடா ஏஸ் வாகனங்களில் சுவாமிகள் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு வந்தன. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி பொது மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் மீறி குளித்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் மாசிமகத் தீர்த்தவாரியில் கடலில் குளிக்க வந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. டி.எஸ்.பி., வனிதா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினம் கடற்கரையில் இன்று நடக்கும் மாசிமகத் திருவிழாவில் காலை 5 மணிக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், வரதராஜபெருமாள், மணவாள மாமுனிகள் சுவாமிகளுடன் இன்று காலை 5 மணிக்கு தேவனாம்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளுகின்றனர். காலை 8 முதல் 9 மணி வரை தீர்த்தவாரி நடக்கிறது.