பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாசிமக திருநாளையொட்டி, 1008 பால்குடங்களை சுமந்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டு அறக்கட்டளை சார்பில், நேற்று 1008 பால்குட திருவிழா நடந்தது. இதில், பெண்கள் திரளாக கலந்துகொண்டு பால் குடங்களை சுமந்தபடி, கோவிலை சுற்றி ஊர்வலமாக நான்கு ராஜவீதிகள் வழியாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து, முத்து மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். முன்னதாக, பால்குட திருவிழா துவக்க நிகழ்ச்சிக்கு பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ, அரண்மனை தேவஸ்தானம் உதவி கமிஷனர் ஞானசேகரன், மாரியம்மன் கோவில், ஸ்ரீகைலாசநாதர் கோவில் நித்திய வழிபாட்டுக்குழு தலைவர் சிவகணேச சுப்பிரமணியன், பழனி பாலதண்டாயுதபாணி அடிமை ஜெயராமன் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாசிமக திருநாளை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம், ஆராதனை நடந்தது. 12.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், உற்சவ அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. ஏற்பாட்டை முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணைச்செயலாளர் செல்லப்பாண்டியன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.