பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
ஈரோடு : ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் மாசி மாதம் குண்டம் திருவிழா, ஃபிப்ரவரி 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ல் கொடியேற்றமும், தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. மார்ச் 6ம் தேதி இரவு 7 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று முன்தினம், அதிகாலையில் கோவிலில் குவிந்த பக்தர்கள், தங்களின் வேண்டுதலுக்கேற்ப குண்டத்துக்கு தேவையான மரக்கட்டைகளை காணிக்கையாக வழங்கினர். முன்னதாக, 5ம் தேதி இரவு முதலே கோவிலின் முன், குண்டம் இறங்க பக்தர்கள் காத்துக் கிடந்தனர். நேற்று, காலை 4 மணிக்கு, பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். சில பெண்களும், ஆண்களும், கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினர். குண்டம் திருவிழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம், விழாக்குழு சார்பில் நீர்மோர், கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்றிரவு 9 மணிக்கு பத்ரகாளியம்மன் நூதன அலங்காரத்துடன், நாதஸ்வர இன்னிசையுடன் நகர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை 5 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.