பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வெள்ளித்தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் வெள்ளி தேரோட்ட திருவிழா துவங்கியது. அதன்பின் "திருக்கம்பம் நடுதல், பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி நேற்று அதிகாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மற்றும் தீர்த்தக்குடங்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 4.30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். காலை 11.15 மணிக்கு அம்மனுக்கு திருகல்யாண உற்சவம் நடந்தது. "மெரூன் நிற பட்டு உடுத்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குருக்கள் மந்திரம் ஓத திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு மஞ்சள் கிழங்கு மற்றும் மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவம் நிறைவடைந்தவுடன் பகல் 12.00 மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், வெள்ளி தேரில் அம்மனும், மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர். திருக்கல்யாண உற்சவத்தில், கோவில் பரம்பரை அறங்காவலர் தொழிலதிபர் மகாலிங்கம், கோவில் செயல் அலுவலர் நாகையா உட்பட பலர் பங்கேற்றனர்.