பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
கும்பகோணம்: மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணிஸ்வாமி கோவிலின் திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக திகழும், சிறப்புமிக்க வைணவ தலம் சக்கரபாணி சுவாமி கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று மூர்த்திகளின் சொரூபமாகவும், சூரியபகவான் சரணாகதி அடைந்த தலம் என்பதால், பாஸ்கரஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட இத்தலம் சகல தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகார, பிரார்த்தனை தலமாகவும் போற்றப்படுகிறது. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 28ம் தேதி காலை 7.30மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் மாசிமகப்பெருவிழா துவங்கியது. நாளை (9ம்தேதி வரை) இவ்விழா நடைபெற உள்ளது. இதற்கிடையில் நடைபெற்ற இவ்விழா நாட்களில் இந்திரவிமானம், சந்திரபிரபை, சேஷவாகனம், ஓலைச்சப்பரத்தில் கருடசேவை, அனுமந்தவாகனம், யானை வாகனம், சூர்ணாபிஷேகம் என, தினம் ஒரு வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் (6ம் தேதி) காலை வெண்ணெய்தாழியும், இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடந்தது. நேற்று மாசிமகத்தை முன்னிட்டு அதிகாலை விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் சக்கரபாணிசுவாமி தேரில் எழுந்தருளினார். காலை 6.45 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளையும் சுற்றிவந்து நிலைக்கு நேற்று காலை 11.45மணிக்கு தேர் வந்தடைந்தது. தொடர்ந்து சக்கரபாணி சுவாமி காவிரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறிய ரதத்தில் ஸ்வாமி தாயாருடன் எழுந்தருள ரதப்புறப்பாடு நடந்தது.