குடந்தை சாரங்கபாணி கோவிலில் மாசிமகத்தையொட்டி தெப்ப விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2012 12:03
கும்பகோணம்: மாசிமகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி ஸ்வாமி கோவிலின் தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. 108 வைணவத்திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகவும் திகழ்வது கும்பகோணம் ஆராவமுதன் என்கிற சாரங்கபாணி சுவாமி எழுந்தருளியுள்ள சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலாகும். கோவிலின் தெப்பத்திருவிழா கடந்த 2ம்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் துவங்கியது. கடந்த 3ம் தேதியன்று இரவு கோவிலிலிருந்து பெருமாள் உபயநாச்சியார்களுடன் பிரகாரத்தில் புறப்பாடாகி, ஊஞ்சல்மண்டபத்தில் எழுந்தருளினார். அதைதொடர்ந்து சடாரி திருமஞ்சனம் மற்றும் மண்டப ஆராதனம் கண்டருளலும் நடந்தது. நேற்று முன்தினம் வரை இதே நிகழ்ச்சி நடந்தது. நேற்று 7ம் தேதி, காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பாடு நடந்து, ஹேம புஷ்கரணி எனும் பொற்றாமரை திருக்குளத்தில், மணிரத்ன புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் நேற்று இரவும் விசேஷ வாணவேடிக்கைகளுடன் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பபவனி நடந்தது. இந்த தெப்ப திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை மற்றும் மாலை முதலே பொற்றாமரை குளத்துக்கு வந்திருந்து, தெப்ப திருவிழாவை கண்டுகளித்தனர். தெப்ப திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் டி.எஸ்.பி.,க்கள் சிவபாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் தலைமையில் போலீஸார், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் செய்திருந்தனர். பின்னர் இரவு பெருமாள் ஆஸ்தானத்திற்கு திரும்ப எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், தக்கார் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.