திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரியையொட்டி, துரிஞ்சலாற்றில் நீராடி பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜன் குழந்தை பேறு இல்லாமல் அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டியதால், அவருக்கு அண்ணாமலையாரே மகனாக பிறந்தார் என்று தல புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் தன் தந்தையான வள்ளாள மஹாராஜனுக்கு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றங்கரைக்கு சென்று ஆண்டு தோறும் மாசி மகத்தன்று திதி கொடுப்பது வழக்கம். நேற்று அருணாசலேஸ்வரர் துரிஞ்சாலற்றங்கரைக்கு சென்று நீராடி வள்ளாள மஹாராஜனுக்கு திதி கொடுக்கும் வைபோகம் நடந்தது. பின்னர் பக்தர்களும் துரிஞ்சலாற்றில் நீராடி இறந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர்.