பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், வெள்ளி ரத உற்சவம், நேற்றுமுன்தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது, கூட்டத்தின் நடுவில் விழுந்த வெடி வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், இந்தாண்டு பிரம்மோற்சவம், கடந்த மாதம் 27ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவிழாவான, நேற்றுமுன்தினம் காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவம் நடந்தது. இரவு, வெள்ளி ரத உற்சவம் கோலாகலமாக நடந்தது.
வெடியால் பரபரப்பு: கோவிலிலிருந்து புறப்பட்ட வெள்ளித்தேர், கிழக்கு ராஜவீதி, செங்கழு நீரோடை வீதி வழியாக, இரவு 10.15 மணிக்கு, கச்சபேஸ்வரர் கோவில் சந்திப்பை வந்தடைந்தது. அங்கு அரை மணி நேரம் வாணவேடிக்கை நடந்தது. அப்போது, மேலே சென்ற வெடி, மக்கள் கூட்டத்திற்கு நடுவில் விழுந்து வெடித்தது. அருகிலிருந்தவர்கள் அலறி அடித்தபடி ஓடினர். போலீசார் விரைந்து சென்று, மக்களை அமைதிப்படுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நாளை காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை, விஸ்வரூப தரிசனம் நடைபெற உள்ளது.