விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் திதி கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2012 12:03
விருத்தாசலம் :விருத்தாசலத்தில் மாசிமகத் திருவிழாவையொட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. நேற்று இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடும் நிகழ்ச்சி விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் நடந்தது. சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே ஆற்றுக்கு வரத் தொடங்கினர். இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவே கோவிலுக்கு வந்து தங்கி அதிகாலையில் திதி கொடுத்தனர். நேற்று காலை விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்றியுள்ள கிராமப் புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியதால் நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.