திருக்கோவிலூர் :திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பாறை மீது உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தீமிதி விழா நடந்தது. இதனையடுத்து காலை 11 மணிக்கு அரவான் ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு அர்ச்சுணன் மாடு விரட்டும் நிகழ்ச்சி, 6 மணிக்கு அரவான் களபலி முடிந்து ஊர்வலம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட கரகம், அக்னி சட்டியுடன் மேலதாளம் முழங்க கோவிலை அடைந்தது. திரவுபதி சமேத அர்ச்சுணன் எழுந்தருளி, அவர் முன்பாக அக்னி குண்டத்தில் கரகம் இறங்கியதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.