அழகர்கோவில் : அழகர்கோவில் தெப்பத் திருவிழாவில் பத்து ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தெப்பத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் குளக்கரையை பெருமாள் சுற்றி வருவார். இந்தாண்டு பொய்கைக்கரைப்பட்டி மக்களுடன் இணைந்து கோயில் நிர்வாகத்தினர் மலையில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தனர். இதனால் மழைநீர் தெப்பத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தாண்டு தெப்ப உற்சவம் மார்ச் 6ல் துவங்கியது. அன்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் கோயிலை வலம் வந்தார். மறுநாள் கஜேந்திர மோட்சம் நடந்தது. நேற்று நடந்த தெப்பத் திருவிழாவில் தெப்பத்தில் சுந்தரராஜப்பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். காலையில் ஒரு முறையும், மாலையில் இரு முறையும் குளத்தை வலம் வந்த பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். நிர்வாக அதிகாரி செல்வராஜ் கூறுகையில், கிராமத்தினர் உதவியுடன் தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. குளத்தைச்சுற்றி மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. மைய மண்டபம் சிதைந்து உள்ளது. தண்ணீர் வற்றியவுடன் புதுப்பிக்கப்படும். குளக்கரையை சுற்றி பேவர்பிளாக் கற்கள் பதித்து, பார்க் அமைக்கும் திட்டமும் உள்ளது, என்றார்.