பதிவு செய்த நாள்
09
மார்
2012
10:03
பரங்கிப்பேட்டை : கிள்ளையில், மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, முஸ்லிம்கள் நேற்று, வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம், கிள்ளை முழுக்குத் துறையில், நேற்று நடந்த மாசி மகத்திருவிழாவில் பங்கேற்க, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி வந்தபோது, கிள்ளை தைக்கால் பெரிய பள்ளிவாசலில், சையத் சக்காப் தலைமையில், முஸ்லிம்கள் இந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், சர்க்கரை, பட்டு சார்த்தி, மத நல்லிணக்க வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும், முஸ்லிம், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின் தர்காவில், இஸ்லாமிய முறைப்படி, பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து, முழுக்குத் துறையில், ஆற்றில் பூவராக சாமிக்கு, தீர்த்தவாரி நிகழ்ச்சியும், கிள்ளை மண்டகப்படியாகி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பெரிய பள்ளிவாசல் டிரஸ்டி, சையத் சக்காப் கூறுகையில், "ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி, மாசி மகத் திருவிழாவிற்கு வரும்போது, முன்னோர் வழக்கப்படி, 6 தலைமுறையாக, வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்துமத முறைப்படி, பூவராகசாமிக்கு, பழம், நாட்டு சர்க்கரை, பட்டு சாத்தப்பட்டது என்றார். இதே போல், பரங்கிப்பேட்டை அடுத்த, புதுப்பேட்டை, சாமியார்பேட்டை கடற்கரையில், நூற்றுக்கணக்கான சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடந்தது.