பதிவு செய்த நாள்
09
மார்
2012
10:03
ஆலங்குடி : ஆலங்குடி அருகே உள்ள பெருங்கரையடி மீண்ட அய்யனார் கோவிலில் உள்ள, 32 அடி வெள்ளைக் குதிரைக்கு, 950 காகிதப்பூ மாலைகள் அணிவித்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளமங்கலத்தில், வில்லுணி ஆற்றங்கரையில், பெருங்கரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், மாசி மாதம் பவுர்ணமி நாள் துவங்கி, இரண்டு நாள் திருவிழா நடக்கும். இந்தாண்டு, நேற்று முன்தினம் மாசி மாதத் திருவிழா துவங்கியது. புதுக்கோட்டை மட்டுமின்றி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலின் முன்புறமுள்ள, 32 அடி உயரமுள்ள அய்யனாரின் வெள்ளைக் குதிரைக்கு, 950 பிரமாண்ட காகிதப்பூ மாலைகளை அணிவித்தும், பால்குடம், பறவைக் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்தும், நேர்த்திக் கடன் செலுத்தினர். இரண்டாம் நாளான நேற்று, கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில், தெப்பத் திருவிழா நடந்தது. தெப்பத்தில், அய்யனாரின் உற்சவ மூர்த்தி எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அய்யனார் கோவில் திருவிழாவுக்காக, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆலங்குடியில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.