பதிவு செய்த நாள்
09
மார்
2012
10:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும் 13ம் தேதி மாலை திறக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி மாத பூஜைகளுக்காக கோவில் மார்ச் 13 மாலை 5.30 க்கு நடை திறக்கப்படும். கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறப்பார். சன்னிதியில் விபூதி அபிஷேகத்தில் தியான நிலையில் இருக்கும் அய்யப்பனை எழுப்பி, நடை திறக்கப்பட்டது தெரிவிக்கப்படும். அன்றைய தினம், வேறு பூஜைகள் ஏதுமிருக்காது. மறுநாள் (14ல்) அதிகாலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். தொடர்ந்து அன்று முதல் மார்ச் 18 வரை தினமும், சகஸ்ரகலச பூஜை, சந்தன அபிஷேகம் (களபாபிஷேகம்) போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் மதியம் 12.30 மணிக்கு பிறகு, முதலில் சந்தன அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தொடர்ந்து சகஸ்ரகலசாபிஷேகம் அய்யப்பனுக்கு செய்விக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நிறைவுற்று, மார்ச் 18 இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து பங்குனி உத்திர உற்சவத்திற்காக, கோவில் நடை மார்ச் 27 மாலை 5.30 க்கு திறக்கப்படும். தொடர்ந்து மறுநாள், கொடியேற்ற நிகழ்ச்சியுடன் உற்சவம் துவங்கும். ஏப்., 5ல் பங்குனி உத்திரம் உற்சவமும், பம்பை நதியில் ஆராட்டு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும் நடைபெறும். இதையடுத்து, அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்படும்.