கடவுள் கொடுத்த பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள், என்கிறார் சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமிகள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு குணம் உண்டு. அது என்னவென்றால், நாள் செல்ல செல்ல எதுவும் ஆற்றல் குறைந்து கொண்டே போகும். விதிவிலக்காக, ஆசை மட்டும் வளர்ந்து கொண்டே செல்லும். ""மனிதனுக்கு வயதாகி விட்டது. பல் எல்லாம் கீழே விழுந்துவிட்டது. தலை நரைத்துப் போனது. கையில் ஊன்றுகோல். இவ்வளவு ஏற்பட்ட பிறகும் மனதில் ஆசை எழுகிறது. அதுவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது, என்று ஆசையின் தன்மையைக் குறிப்பிடுகிறார் ஆதிசங்கரர். கையில் ஒரு ரூபாய் இருப்பவன் பத்து ரூபாய்க்கு ஆசைப்படுகிறான். பத்து ரூபாய் கிடைத்து விட்டால் நூறு ரூபாய் தேவைப்படுகிறது. நூறு, ஆயிரம், லட்சம்,கோடி என்று பணம் வந்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை. நாட்டுக்கே ராஜாவாக வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. ராஜாவானாலும் ஆசை விடுவதில்லை. செல்வத்துக்கு அதிபதியான குபேரபுரியை ஆள ஆசை வருகிறது. குபேரனோ, இந்திரபதவிக்கு ஆசைப்படுகிறான். இந்திரனோ சிருஷ்டிகர்த்தாவாக மாற ஆசைப்படுகிறார். ஆசைக்கு எல்லை தான் ஏது? யாராலும் அதை அடைய முடியாது. மனிதனுக்கு இருக்கும் பெரிய எதிரி ஆசை தான். மனிதப்பிறவியின் லட்சியம் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைவது தான். ஆசைக்கு அடிமையான மனிதன், கண்ணில் கண்ட அனைத்தையும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கிறான். ஆசையை மனதில் இருந்து அகற்றும்படி சாஸ்திரங்கள் நமக்கு உபதேசிக்கிறது. கடவுள் நமக்கு பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். எது நல்லது எது கெட்டது என்று அதன்மூலம் பகுத்தறிய வேண்டும். அது நம் பொறுப்பு என்பதை உணர வேண்டும். பகவான் நாமத்தை எப்போதும் பக்தியுடன் ஜெபியுங்கள். அவரின் பெருமைகளைப் போற்றும் கீர்த்தனைகளைப் பாடுங்கள். நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரின் அருளுக்கு பாத்திரமாவீர்கள். சிருங்கேரி சுவாமிகள் நாளை(மார்ச்10) நாமக்கல் சந்நிதி தெருவில் உள்ள முல்லை மகாலில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். தொடர்பு எண்: 94433 42420.