பதிவு செய்த நாள்
09
மார்
2012
10:03
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில், மலேசிய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு, நேற்று மாலை 4 மணிக்கு, மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் வந்தார். பின், சொர்ண கணபதி, சுப்ரமணியர், துர்க்கை, தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, கடைசியாக சனிஸ்வர பகவானை வழிபட்டார். சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், மலேசியாவில் தமிழர்கள் 150 ஆண்டுகள் சம உரிமையுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றனர். மலேசிய தமிழர்கள் சிறப்பாக உள்ளனர். இந்தியாவில் உள்ள சைவ, வைணவ ஸ்தலங்களுக்கு மலேசிய தமிழர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோன்று மலேசியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு, இந்தியாவில் உள்ள தமிழர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர் என்றார்.