திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசிதிருவிழாவில் நேற்று தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் மாசிதிருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நாளான தேரோட்டம் கடந்த 6ம் தேதி நடந்தது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் யாதவர் மண்டகப்படியில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றிவரும் தெப்போற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் சுதர்சன், உதவிஆணையர் செல்லத்துரை உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆச்சார்ய உத்ஸவம்: மாசிதிருவிழாவில் நேற்று முன்னதாக திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு காப்புகட்டிய சிவாச்சாரியர் சிவசுப்பிரமணியனுக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் வெங்கடேசன், தலைமை மணியம் ராமசாமி, கருவூல கணக்கர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.