அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மற்றும் கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு நடந்தது. திருமுருகநாதர் தேரிலுள்ள பூமாதேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதையடுத்து தேரின் சக்கரங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஸ்வநாதன், திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை தலைவர் ராமசாமி, செயலாளர் குப்புசாமி, செயல் அலுவலர்கள் சரவணபவன் (கோவில்), நந்தகோபால் (பேரூராட்சி) உட்பட பலர், தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள், "திருமுருகநாதருக்கு அரோகார, சண்முகநாதருக்கு அரோகரா என்று கோஷமிட்டவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதியில் ஆடி அசைந்து வந்த தேர், திருப்பூர் ரோடு அருகே நிறுத்தப்பட்டது. முன்னதாக, விநாயகர் தேரோட்டம் நடந்தது.