பதிவு செய்த நாள்
09
மார்
2012
11:03
கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுண்டம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதி ஸ்வாமி கோவில் உள்ளது. ஒரே தேவியாம் பூமிதேவி நாச்சியாருடன், ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மார்ச்.10 காலை ஏழு மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. காலை ஏழு மணிமுதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இரவு இந்திர விமானத்தில் பெருமாள் தாயாருடன் வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை வெள்ளிப்பல்லக்கில் பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது. இரவு வெள்ளிசூரியபிரபை, ஆதிசேட, கருட, அனுமந்த, யானை, புன்னை மர, குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 18ம் தேதி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு தேசிகனோடு பெருமாள், தாயார் தேரில் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து காலை எட்டு மணிக்கு பக்தர்களால் வடம்பிடித்து தேரோட்டம் நடக்கிறது. 10 மணிக்கு ஒப்பிலியப்பன் மலராடை அணிவிப்பு திருக்காட்சி நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு உற்சவர் திருவடித்திருமஞ்சனம் நடக்கிறது.