பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
குளச்சல் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று நள்ளிரவு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் லெட்சுமிபுரம் ரோடு வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தென்னிந்தியாவின் புனிதத்தலமான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை, பங்குனி மாதம் மீன பரணி, மாசி கொடைவிழாவின் ஆறாம்நாள் விழாவான வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடக்கிறது. மாசி கொடைவிழாவின் ஆறாம்நாள் விழாவான நேற்று காலை 5மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30மணி தீபாராதனை, 9.30மணி அம்மன் வெள்ளி பல்லகில் பவனி வருதல். மதியம் ஒரு மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30மணி சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாளபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடந்தது.
நள்ளிரவு 12 மணியிலிருந்து ஒரு மணிவரை வலியப்படுக்கை எனும் மஹாபூஜை நடந்தது. இந்த பூஜையில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் உள்ளிட்ட ஏராளமான பழ வகைகள், காய்கறிவகைகள், திரளி, மண்டையப்பம், பாயாசம், பலகாரம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்கள் உள்ளிட்டவைகளை குவித்து வைத்து அம்மனுக்கு படையலாக வைக்கப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. வலிய படுக்கைபூஜை மற்றும் சிறப்பு தீபாராதனையை காண கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் வளாகத்தில் இடம் இல்லாததால் கோயிலுக்கு முன்புள்ள லெட்சுமிபுரம் ரோட்டில் நீண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டமாக நின்று அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு படைக்கப்பட்ட உணவு படையல் இன்று காலையில் நடக்கும் தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.