பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அக்னி நட்சத்திரவிழா நேற்று (மே., 8ல்) சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இவ்விழா மே 21வரை நடக்கிறது. கடம்ப மரப்பூக்களின் மூலிகைக் காற்றை அனுபவிக்க பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.பழநியில் ஆண்டு தோறும் சித்திரை பின் ஏழு வைகாசி முன் ஏழு நாட்களில் அக்னி நட்சத்திரம் (சித்திரை கழுவு) விழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் முதல் நாளான நேற்று (மே., 8ல்) மலைக்கோயில் பெரிய நாயகியம்மன் கோயில் களில் சீதகும்பம் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.இவ்விழா நாட்களில் மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக் குலுங்கும் கடம்ப மரப்பூக்களின் வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி வெப்பநோய் ஆகியவை குணமாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
இதனால் பெண்கள் கடம்ப பூக்களை தலையில்சூடி அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மலைக்கோயிலை கிரிவலம் வருகின்றனர். விழாவின் கடைசிநாள் (மே21ல்) மலைக்கோயில் அதிகாலை 4:00மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.