பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
பெ.நா.பாளையம் : காரமடை அருள்மிகு ரங்கநாதர் கோவிலில், மாசி மாத தேர்திருவிழாவை யொட்டி, ஒரு வாரமாக சிறப்பு பூஜை நடந்து வருகிறது. தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், கையில் பந்த சேவை மற்றும் தண்ணீர் சேவையுடன் காரமடை ரங்கநாதர் கோவிலை வலம் வந்து, பெரு மாளை வழிபட்டு வருகின்றனர்.
பந்தசேவை ஏந்திய பக்தர்கள் கூறியதாவது:
கடந்த மூன்று தலைமுறையாக, இதே பந்தசேவையை ஏந்தி, காரமடை ரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவிற்கு சென்று வருகிறோம். சிறு திரியில் ஆரம்பித்து, அதை காடா துணியால் பலமுறை சுற்றி, சுற்றி இந்த பிரமாண்ட பந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 180 கிலோ. இதை ஒரே பக்தர் நீண்ட நேரம் சுமந்து செல்ல முடியாது என்பதால், பக்தர்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்றி தூக்கி செல்வோம். நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் வலம் வந்த பிறகு, பந்தசேவையை வேனில் ஏற்றி காரமடை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று, ரங்கநாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்வோம். பந்தசேவையை மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து, அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து, பராமரித்து வருவோம். இவ்வாறு, அவர்கள் கூறினார்.