பதிவு செய்த நாள்
09
மே
2019
03:05
ஈரோடு: ஈரோடு, ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவில் விழாவையொட்டி, பக்தர்கள் நேற்று 8ல், அக்னி சட்டி ஏந்தியும், பறவை காவடி அலகு, மயில்காவடி அலகு குத்தி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியில் சக்தி மாகாளியம்மன், மதுரை வீரன், கருப்பராயன், முனியப்பன் சுவாமி கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் விழா சிறப்பாக
கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த, 30ல் பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று (மே., 8ல்) பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள் அக்னி சட்டி ஏந்தியும், 30க்கும் மேற்பட்ட ஆண்கள் முகத்தில் வேல் அலகு குத்தியும், மயில்காவடி சுமந்தபடி முதுகில் கத்தி அலகுகளை குத்தியும், பறவை காவடி அலகில் முதுகில் கத்திகளை குத்திக்கொண்டு கிரேன் வாகனங் களின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் வந்தனர். இதைப்பார்த்த பொது மக்கள் பரவசத்தில் மெய்சிலிர்த்தனர். ஊர்வலம் ஈரோடு காவிரி கரையில் துவங்கி,
காவிரி ரோடு, கருங்கல்பாளையம், காந்தி சிலை, காமராஜர் பள்ளி வழியாக ராஜாஜிபுரம் சக்தி மாகாளியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சக்தி மாகாளியம்மன் புஷ்ப
அலங்காரத்தில் பவனி வந்தார். இன்று (மே., 9ல்) காலை, 9:30 மணிக்கு மதுரை வீரன் திருவீதி உலா, நாளை வாண வேடிக்கை நடக்கிறது.