பதிவு செய்த நாள்
09
மே
2019
04:05
சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.
சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 2ல் தொடங்கியது. நேற்று (மே., 8ல்)நடந்த சிறப்பு பூஜையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத
சவுந்தரராஜருக்கு, சர்வ அலங்காரம் செய்து, வண்ண மலர்களை, கூடை, கூடையாக சமர்ப்பித்து, புஷ்பாஞ்சலி நடந்தது.
ஏராளமான பக்தர்கள், தங்களால் இயன்ற மலர்கள், பழங்களை, சீர்போல் தட்டுகளில் எடுத்துவந்து, சுவாமிக்கு படைத்தனர். பெருமாளுக்கு, புஷ்பாஞ்சலி செய்தால், நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கையாகும். நாளை தீர்த்தவாரி, வரும், 11 மாலை, திருக்கல்யாண உற்சவம், 14ல் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடையும். மே, 15 முதல், வசந்த உற்சவம், ஐந்து நாட்கள் நடக்கும்.
அலகுகுத்தி...: அஸ்தம்பட்டி, மாரியம்மன், பிடாரியம்மன், விநாயகர் கோவில் பண்டிகை, கடந்த, ஏப்., 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று (மே., 8ல்) காலை, அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், இரவில், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (மே., 10ல்), அன்னதானம், சத்தாபரணம், 11ல் மஞ்சள் நீராட்டம், ஊஞ்சல் உற்சவம், மே, 17ல் மறுபூஜை நடக்கிறது.
கொடியேற்றம்: சங்ககிரி, மலைக்கோட்டை, சென்னகேசவப் பெருமாள் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, நேற்று (மே., 8ல்), கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி,
மலையிலிருந்து இறங்கி, நகருக்குள் எழுந்தருளினார். இரவு, அன்னபட்சி வாகனத்தில் வலம்வந்தார். இன்று சிங்க வாகனம், அடுத்தடுத்த நாட்கள் முறையே, அனுமந்தன், கருடன், சேஷ, யானை வாகனங்களில் அருள்பாலிப்பார். மே, 14ல், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப வாகனம், 15ல், குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, நகரில் முக்கிய வீதிகளில்
உலா வருவார். 16ல், தேர் வடம்பிடித்தல் நடக்கிறது.
இதையொட்டி, மலையடிவாரம் உள்ள மண்டபத்தில், தினமும் காலை, மாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும்.
பொங்கல் வைபவம்: வாழப்பாடி, காளியம்மன் நகர், கருமாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று (மே., 8ல்) காலை முதல், மதியம், 1:00 மணி
வரை, திரளான பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, கேழ்வரகு கூழ், சுவாமிக்கு படைத்து, சிறப்பு பூஜை நடந்தது.
மூலவர், பச்சரிசி மாவு, மலர்களால் காட்சியளித்தார்.தேரோட்டம்: பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனூர் மாரியம்மன் கோவிலில், நேற்று (மே., 8ல்), தேரோட்டம் நடந்தது. காலையில், மா விளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, கோவிலிலிருந்து, ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்துச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மீண்டும் கோவிலை அடைந்தது. தேரில், சிறப்பு
அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார்.
* கெங்கவல்லி அருகே, புனல்வாசல், மகாசக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று (மே., 8ல்), 20 அடி உயர அம்மனை, தேரில் எழுந்தருளச்செய்து, முக்கிய வீதிகள் வழியாக உலா
வரச்செய்தனர்.
தீ மிதி விழா: இளம்பிள்ளை அருகே, கஞ்சமலை காலாங்கி சித்தர்கோவிலில், கடந்த, 5ல் விநாயகர் திருவீதி உலாவுடன், திருவிழா தொடங்கியது. நேற்று (மே., 8ல்) மாலை, அருகிலுள்ள காளியம்மன் கோவில் வளாகத்திலுள்ள, தீ குண்டத்தில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, காலாங்கி சித்தர்கோவில் மண்டபத்தில், பரம்பரை காணியாச்சிகார பக்தர், மொட்டை யடித்து சித்தர்போல் வேடமணிந்தார். அவரை, ஒருவர் துண்டால் அடித்து, மன்னிப்பு கேட்டார். இச்செயல், அக்கோவில் தல வரலாற்றை உணர்த்துவது என, பக்தர்கள் தெரிவித்தனர்.