பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
""நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அதைப் பின்பற்றும் வைராக்கியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், என்று சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் குறிப்பிடுகிறார். பகவான் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார். ஆனால், இந்தஉறுதித்தன்மை நமக்கெல்லாம் இருக்கிறதா? யாருக்கும் இல்லை. பிரகலாதன் பக்தியோடு பகவானை ஆராதித்தான். அவனிடம் இரண்யகசிபு, எங்கேயடா உன்னுடைய நாராயணன் இருக்கிறான்? என்று கேட்டபோது, எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான், என்று பதில் அளித்தான். ""இந்த தூணில் இருக்கிறானா! அதை உடைக்கட்டுமா! என்று இரண்யகசிபு கோபத்தில் கத்தினான். அப்போது பகவான் தூணிலிருந்து நரசிம்மனாக வெளிப்பட்டார். பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற எண்ணம் நமக்குள் நிலைக்க வேண்டும். புகழ்ந்தாலும், நிந்தித்தாலும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை கொண்டவனால் மட்டுமே, பகவான் எங்கும் நிறைந்திருப்பதை உணர முடியும். இயன்றவரை மவுனமாக இருக்கப் பழகுங்கள். பேசினால் ஆன்மிக சம்பந்தமாகப் பேசுங்கள்.
இந்த உலகத்தை படைத்த பரமாத்மா ஒருவன் இருக்கிறான் என்று முழுமையாக நம்புங்கள். அவன் நாம் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்ப பலன் கொடுக்கிறான் என்பதை உணருங்கள். அவனது நாமத்தை ஜபித்தபடி இருங்கள். இப்படிப்பட்ட பக்தனையே பகவான் விரும்புகிறார். நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அதைப் பின்பற்றும் வைராக்கியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய வாழ்வு புனிதமாகி விடும். தெய்வ சம்பத்தைப் பெற்றுத் தரும் சக்தி, பக்திக்கு உண்டு.
சிவானந்த லஹரியில், ""ஹே! சம்போ! உன் சரணங்களை நான் பூஜிக்கிறேன்! மனதால் உன்னை தியானம் செய்கிறேன். உன்னையே சரணடைகிறேன். வாக்கினால் உன்னை வேண்டுகிறேன். உன் கருணாகடாட்சத்தை என்மேல் செலுத்தவேண்டும். ஹே! ஜகத்குரோ! என் மனதிற்குநல்ல உபதேசத்தை செய்தருள வேண்டும்,என்று பரமேஸ்வரனிடம் ஆதிசங்கரர் வேண்டுகிறார். அதுபோல, தூயஉள்ளத்தோடு நாமும்பகவானைப் பிரார்த்திப்போம்.
சிருங்கேரி சுவாமிகள் நாளை(மார்ச்11) பவானி சங்கமேஸ்வரர் யாத்திரிகள் விடுதி வளாகத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். தொடர்பு எண்: 94439 42282.