பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
ஆனைமலை : கோவை மாவட்டம் ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடந்தது.
பின்னர் சிறிய 27 அடி தேரில் விநாயகரும், 63 அடி திருத்தேரில் கிருஷ்ணர், தர்மராஜா திரவுபதியம்மனும் எழுந்தருளினர்.
திரவுபதியம்மன் கோவில் வீதி வழியாக விநாயகர் தேர் முன்பு செல்ல திருத்தேர் பின் சென்றது. மாலை 5.30 மணிக்கு கோவிலில் இருந்து தேர் கிளம்பி மாலை 6.30 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் இடத்தில் நிறுத்தப்பட்டது. இரவு 10.00 மணிக்கு குண்டத்தில் "பூ வளர்த்தனர். நேற்று காலை 10.00 மணிக்கு குண்டம் விழா துவங்கியது. முதலில் தலைமை அருளாளி தண்டபாணி குண்டம் இறங்கினார். தொடர்ந்து அருளாளிகளும், நூற்றுக்கணக்கான பக்தர்களும் குண்டம் இறங்கினர்.
ஆண்கள் குண்டம் இறங்கி முடிந்ததும் பெண்கள் குண்டத்திலிருந்த "பூவை கைகளில் அள்ளி கொடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா முடிந்து காலை 11.00 மணிக்கு திருத்தேர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அவினாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா ஸ்வதசித்தானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், விழாக்குழு தலைவர் விக்ரம், கோவில் முறைதாரர்கள், அருளாளிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர். வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திரவுபதி அம்மன் திருத்தேர் பொள்ளாச்சி தாலுகாவில் மரத்தாலான மிகப்பெரிய தேர் ஆகும். குண்டம் 60 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டூர்:ஆனைமலை அடுத்த கோட்டூர் பழனியூர் மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் காலை 7.00 மணிக்கு குண்டம் விழா துவங்கியது. முதலில் கோவில் பூசாரி குண்டம் இறங்கினார். தொடர்ந்து 80 பக்தர்கள் குண்டம் இறங்கி, திருத்தேரில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் திருத்தேர் கோவில் அருகே உள்ள உப்பு கிணறு பகுதியில் நிறுத்தப்பட்டது.