பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
மார்த்தாண்டம் : கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி பரணி தூக்கத்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 26ம் தேதி பச்சிளம் குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள தேவி கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது. இக்கோயில் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபாட்டு முறைகள் கேரள கலாச்சாரத்தை ஒத்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளது மற்றுமொரு சிறப்பாகும். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வட்டவிளையில் மூலகோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழா கோயிலும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி பரணியை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் தூக்க திருவிழாவிற்காக அம்மன் மூலகோயிலில் இருந்து வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். இதேப்போன்று ஆண்டுதோறும் மகரவிளக்கை முன்னிட்டு 41 நாட்கள் நடக்கும் மண்டலகால சிறப்பு பூஜைக்கும் அம்மன் எழுந்தருளுவார். இந்த பூஜை இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை வெங்கஞ்சி திருவிழா கோயிலில் நடக்கிறது. ஏனைய நாட்கள் அம்மன் மூலகோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தமிழகத்தில் கொல்லங்கோடு, மூவோட்டுகோணம், இட்டகவேலி உள்ளிட்ட ஒருசில கோயில்களில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இதில் கொல்லங்கோட்டில் மட்டுமே ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தைகள் என ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒருமுறை சுற்றிவரும் போது தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் நொடியின்றி நல்லறிவு பெற்று நீண்டகாலம் வாழவும் அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
இந்த ஆண்டைய திருவிழா வரும் 17ம் தேதி துவங்குகிறது. அன்று காலை அம்மன் ஊர் பவனி, மதியம் சமூகவிருந்து, மாலை வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளல், தொடர்ந்து தேவஸம் தந்திரி மூர்த்தி தலைமையில் திருக்கொடியேற்றம், வாணவேடிக்கை, இரவு தேவசம் சேர்மன் பரமசிவன்நாயர் தலைமையில் தூக்கத்திருவிழா துவக்க நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, நள்ளிரவு நாடகம் நடக்கிறது.
இரண்டாம் நாளான 18ம் தேதி காலை மெல்லிசை நிகழ்ச்சி, மாலை ஓட்டன்துள்ளல், திருவிளக்கு பூஜை, இரவு பக்தி இன்னிசை, சங்கீத நாட்டியம், நாடகம் நடக்கிறது. மூன்றாம் நாளான 19ம் தேதி காலை 8 மணிக்கு தூக்க நேர்ச்சை பெயர் பதிவு செய்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. இரவு மெல்லிசை, இன்னிசை நிகழ்ச்சி, சங்கீத நாடகம் நடக்கிறது. நான்காம் நாளான 20ம் தேதி காலை 10.10க்கு தூக்க நேர்ச்சையில் பங்கேற்கும் நேர்ச்சை குழந்தைகள் மற்றும் தூக்கக்காரர்கள் வரிசைப்படுத்துதல் நிகழ்ச்சி, இரவு விருந்தவாத்தியம், நமஸ்காரம், எழுந்தருளல், பரதநாட்டியம், நாடகம் நடக்கிறது. ஐந்தாம் நாளான 21ம் தேதி காலை இந்து ஐக்கியவேதி செயலாளர் பார்கவராமின் சமயசொற்பொழிவு, மாலை ஹரிகதை, இரவு மெல்லிசை, பூஜை எழுந்தருளல், கதகளி நடக்கிறது.
ஆறாம் நாளான 22ம் தேதி நெய்யாற்றின்கரை திவ்யாவின் சமயசொற்பொழிவு, மாலை பாடகம் சிறப்பு நிகழ்ச்சி, நமஸ்காரம், இரவு நாட்டிய நடனம், பூஜை எழுந்தருளல், கதகளி நடக்கிறது. ஏழாம் நாளான 23ம் தேதி தர்மரக்ஷண சமிதி துணைத்தலைவர் ராமகிருஷ்ணனின் சமயசொற்பொழிவு, இரவு பக்தி மெல்லிசை, இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நாடகம் நடக்கிறது.
எட்டாம் நாளான 24ம் தேதி காலை திருவனந்தபுரம் ஸ்ரீகண்டன்நாயரின் சமயசொற்பொழிவு, மாலை நமஸ்காரம், இரவு தேவஸம் தலைவர் பங்கஜாக்ஷன் தம்பி தலைமையில் பண்பாட்டு மாநாடு, இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நாடகம், ஒன்பதாம் நாளான 25ம் தேதி தர்மரக்ஷண சமிதி மாவட்ட துணைத்தலைவர் கோபிதாஸின் சமயசொற்பொழிவு, மாலை தூக்கக்காரர்களின் கடல் நீராட்டு, தூக்க ரதத்தின் சோதனை ஓட்டம் எனும் வண்டியோட்டம், பஜனாமிருதம், இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
விழா நிறைவு நாளான 26ம் தேதி அதிகாலை தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் தூக்க நேர்ச்சையை பார்வையிட பச்சை பந்தல் எழுந்தருளல், காலை 6 மணிக்கு வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை துவங்குகிறது. கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து யானை, அகம்படி அணிவகுப்புடன் கச்சேரிநடை, கண்ணனாகம் வழியாக தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. கடந்த ஆண்டு 1513 தூக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதைவிட கூடுதல் தூக்கம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.