பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
உத்தமபாளையம்:உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவில் தீர்த்தவாரி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காளாத்தீஸ்வரர் சந்திரசேகர் அவதாரத்தில் அம்பாளுடன் பெரியாற்றங்கரைக்கு காலையில் கொண்டு வரப்பட்டார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மஞ்சள் நீராட்டம் செய்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. அங்கிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு மஞ்சள் நீர் தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது.
மாலையில் காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை சார்பில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சோமாஸ்கந்தர், ஞானம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஐந்து வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் நகர் முழுதும் அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்து வழிபட்டனர். கோயில் தலைமை அர்ச்சகர் நீலகண்ட சிவாச்சாரியார், அர்ச்சகர் ஏகாம்பரம் பூஜைகளை செய்தனர். கோயில் நிர்வாக அதிகாரி ராஜா, அனைத்து சமுதாயத்தினர் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தேர்க்கமிட்டி தலைவர் துரைப்பாண்டியன், பேரூராட்சி தலைவர் சகிலாபானு, துணைத்தலைவர் ஜெய்லானி, முன்னாள் துணைத்தலைவர் முகமது அப்துல் காசிம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அயூப்கான், மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். பஞ்ச மூர்த்தி புறப்பாடு ஏற்பாடுகளை காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர். இரவில் சிறப்பு பூஜைகள் செய்து கொடி இறக்கம் செய்யப்பட்டு மாசிமக விழா நிறைவு செய்யப்பட்டது.