பதிவு செய்த நாள்
12
மார்
2012
10:03
திருச்சி: பக்தர்கள் நன்மைக்காக, பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, பூக்களால் பக்தர்கள் அபிஷேகம் செய்யும் பூச்சொரிதல் விழா, நேற்று கோலாகலமாகத் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் முதன்மையானது. ஆண்டுதோறும், மாசி மாதம் கடைசி வார ஞாயிற்றுக் கிழமையில், அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாத முதல் வார செவ்வாய்க் கிழமையில், சித்திரைத் தேரோட்டமும் வெகு சிறப்பாக நடக்கும். இந்தாண்டு பூச்சொரிதல் விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. கோவில் இணை கமிஷனர் செல்வராஜ், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர், பூத்தட்டுகள், பூக்கூடைகள் ஏந்தி, தேரோடும் வீதிகளில், மேள தாளத்துடன், யானைகளுடன் ஊர்வலமாக சன்னதியை சென்றடைந்தனர். தொடர்ந்து, பூச்சொரிதல் விழா நடந்தது. உலக நன்மைக்காக, மாசி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையில் இருந்து, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை வரை, தொடர்ந்து, 28 நாட்களுக்கு, மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்வதாக ஐதீகம். மேலும், மாரியம்மன் விரதத்தின் போது, வழக்கமாக செய்யப்படும் நைவேத்யத்துக்கு பதிலாக, துள்ளுமாவு, இளநீர், நீர்மோர், பானகம், கரும்பு போன்றவை, நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. மக்களுக்காக மாரியம்மன் மேற்கொள்ளும் விரதத்தை போற்றும் விதத்தில், அம்மன் மீது பூத்தூவி வழிபடும் வழக்கமே, காலப்போக்கில் பூச்சொரிதல் விழாவாக மாறியது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் விடிய விடிய பூக்களை கொண்டு வந்து, மாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்.