பதிவு செய்த நாள்
12
மார்
2012
10:03
நகரி :திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், 1 லட்சத்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் முன், கோடை வெயிலின் தாக்கத்தை உணர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வார விடுமுறை மற்றும் வார நாட்களிலும் வெங்கடேச பெருமாளை தரிசிக்க குவிந்த வண்ணம் உள்ளனர்.வெள்ளி முதல் நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம், பாத யாத்திரையாகவும், பஸ், வாகனங்கள் மூலமும் திருமலைக்கு வந்து கொண்டேயிருப்பதை காண முடிந்தது. திருமலையில் இரண்டாவது காம்ப்ளக்ஸ் வளாகங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியில் நீண்ட தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.வழக்கம் போல், தங்கும் விடுதிகள் கிடைக்காத பக்தர்கள், விடுதி வளாகம் மற்றும் சாலை ஓரங்களிலும் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகின்றனர். இலவச தரிசனத்திற்கு, 12 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு, நான்கு மணி நேரமும், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, ஆறு மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பொதுவாக பள்ளிகளில் தேர்வு காலம் துவங்கிவிட்டதால், சனி, ஞாயிறுகளில் கூட்டம் இருக்காது என்ற எண்ணத்தில் பக்தர்கள் பலரும் வருவதால், கூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது. துரித தரிசன வசதிக்காக கோவிலில் தொலைதூர (மகா லகு) தரிசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்குப் பின், லட்டு பிரசாதம் வாங்கவும் ஒரு மணி நேரம் ஆகிறது என, பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பால் ஆகியவை வழங்கப்படுகிறது என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.