பதிவு செய்த நாள்
12
மார்
2012
10:03
காரைக்கால் :காரைக்காலில், சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழாவில், 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு, பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். காரைக்கால் பாலசந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில், 19ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா, காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில், நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், அதைத் தொடர்ந்து, சீனிவாச பாகவதரின் உஞ்÷வ்ருத்தி, பஜனை கீதா கோவிந்தமும், 9.30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியும் நடந்தன.காலை 10 மணிக்கு, காரைக்காலில் உள்ள, 100க்கும் மேற்பட்ட சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு, பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். இதில், நாட்டக்குறிஞ்சி ராமலிங்கம், கலைமாமணி காரை லிங்கம், சங்கீத பூஷணம் குமரவேல், இசை ஆசிரியர் காரை சாய்கிருஷ்ணன், இசைக் கலைமணி சத்தியமூர்த்தி, தனலட்சுமி, சுபா சங்கர், வித்யா விஸ்வநாதன், காயத்ரி சுப்ரமணியன், மீனாட்சி, சுக நிலா உள்ளிட்ட சுமார், 100க்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். இந்நிகழ்ச்சியை, ஏராளமானோர் கண்டு களித்தனர். பகல் 12 மணிக்கு, சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு, பாலசந்தர் சங்கீத வித்யாலயா மாணவர்களின், சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், பக்க வாத்திய கலைஞர்கள் வயலின் சிக்கல் பாலு, காரை சுக பாவலன், ஜெயகவுரி சாய்கிருஷ்ணன், மிருதங்கம் சிங்கல் வடிவேல், நகை ஸ்ரீராம், நாகபாலசுப்ரமணியன், சந்தியபாலன், குருமூர்த்தி, தபேலா சரவணன், கடம் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தேசிய நல்லாசிரியர் நடராஜன், பாலசங்கீத வித்யாலயா டிரஸ்ட் சண்முகநாதன், முத்தரசி, அசோக்குமார் செய்திருந்தனர்.