பதிவு செய்த நாள்
12
மார்
2012
11:03
விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரர், புக்கர் மன்னர்கள், 13ம் நூற்றாண்டில், சிருங்கேரி சாரதா பீடத்தின் 10வது குருவான வித்யாசங்கரதீர்த்தரின் ஜீவசமாதியின் மேல், வித்யாசங்கரர் கோயிலைக் கட்டினர். சாளுக்கிய, திராவிட சிற்பக்கலையம்சம் கொண்டகோயில் இது. சிருங்கேரி என்றதும் பக்தர்களின் நினைவில் எழுவது வித்யாசங்கரர்ஆலயமே. கருங்கல்லால் அமைந்த இக்கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 12 தூண்கள் உள்ளன. இவை மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளைக் குறிக்கின்றன. உதய வேளையில் சூரியக்கதிர்கள், அன்றன்று என்ன ராசியோ அதற்குரிய தூணில் விழுவது சிறப்பம்சம். கலைநயம் மிக்க இக்கோயில்தொல்லியல் துறை யின்பராமரிப்பில் உள்ளது. வாசலில் வித்யாகணபதி, துர்க்கை உள்ளனர். பிரம்மா, விஷ்ணு, மகேசன் மூன்று பக்கங்களில் வீற்றிருக்கின்றனர். சதுர்முக வித்யேஸ்வரர் கருவறையில் அருள்பாலிக்கிறார். பஞ்சமகாகணபதிகள் என்னும் ஐந்து விநாயகர் சந்நிதிகள் சிருங்கேரியில் பிரசித்தம். 1200 ஆண்டுகள் பழமை மிக்க ரத்னகர்ப கணபதி, சாரதாம்பாள் கோயிலில் உள்ள சக்தி கணபதி, வித்யாசங்கரர் கோயிலில் உள்ள வித்யாகணபதி, மடத்தின் நிலைப்படியில் அருள்பாலிக்கும் தோரணகணபதி, மல்ஹானிகரேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்தம்ப கணபதி ஆகியோர் அவர்கள். இதில் சக்திகணபதிக்கு நடக்கும் பிரதோஷபூஜையில் கலந்து கொள்வதை பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர். ஆதிசங்கரருக்கு ஜனார்த்தன சுவாமி கோயிலில் விக்ரஹம் வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. 33வது பீடாதிபதி சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ சுவாமி, சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் ஆதிசங்கரர் வழிபாட்டை ஏற்படுத்தினார். 34வது பீடாதிபதி சந்திரசேகரபாரதீ சுவாமி ஆதிசங்கரருக்கு தனியாக ஒரு கோயிலை நிர்மாணித்தார். 35வது பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்த சுவாமி அக்கோயிலுக்கு விமானம் எழுப்பினார். தற்போதைய குருவான பாரதீ தீர்த்தசுவாமி திராவிடசிற்பக்கலையம்சத்துடன் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டி 16.2.2011ல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். கோயில் சுவரில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு வடிக்கப்பட்டுள்ளது. நாளை(மார்ச்13) கோபிசெட்டிபாளையம் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள சிருங்கேரி சங்கரமடத்தில், சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். போன்: 89035 10125.