காஞ்சிபுரம் : வில்லிவலம் ஸ்ரீமுச்சந்தி அம்மன் கோவில் மாசி மக பார்வேட்டை உற்சவம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில் ஸ்ரீமுச்சந்தியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், வேகவதியாற்றுக்கு அம்மன் எழுந்தருளும் மாசிமக பார்வேட்டை உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி பகல் ஒரு மணிக்கு கோவிலிலிருந்து அம்மன், ஆற்றின் அருகில் அமைக்கப்பட்ட பந்தலுக்கு எழுந்தருளினார். பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 9 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி, வேகவதியாற்றுக்கு புறப்பட்டார். அங்கு கொண்டுவரப்பட்ட முயல் வேட்டைக்காக விடப்பட்டது. பக்தர்கள் முயலை விரட்டிச் சென்று பிடித்தனர். அதன்பின் வான வேடிக்கைகள் முழங்க அம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.