பதிவு செய்த நாள்
15
மே
2019
11:05
திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று அதிகாலை, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா, கடந்த மாதம், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது. மேலும், மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.நேற்று அதிகாலையில், கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 35 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது.தொடர்ந்து அர்ச்சுனன் தவ வேடத்தில் பக்தர்கள்,பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும், ஒரு பாடல் பாடியவாறு ஏறினர். அதை தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து, அர்ச்சுனன் தவம்புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் பனை மரத்தின் கீழ், திருமணம், குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், உற்சவர் திரவுபதியம்மனை வழிபட்டனர்.வரும், 19ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.