புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலத்துடன் நடந்தது. சர்வ அலங்காரத்துடன் திருத்தேரில் வலம்வந்த முத்துமாரி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிப்பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர்த்திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள்கள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. மாலை நான்கு மணிக்கு திருத்தேரில் வீதியுலா வருவதற்காக முத்துமாரியம்மன் உற்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதையடுத்து அம்மன் தேரில் அமர்த்தப்பட்டதும் பெண்களின் மங்கல குரவையும், பக்தர்களின் "அம்மா தாயே முத்துமாரி என்ற கோஷமும், வாண வேடிக்கையும், மங்கள இசையும் விண்ணதிர சரியாக 4.40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கலெக்டர் மகேஸ்வரி, நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் தேரை வடம்தொட்டு துவக்கிவைக்க பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சர்வ அலங்காரத்துடன் முத்துமாரியம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை காணவும், அம்மனை தரிசிக்கவும் கோவிலை சுற்றி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். மாடவீதிகளில் ஆடி, அசைந்தவாறு வலம்வந்த தேர் சரியாக மாலை 6.20 மணிக்கு நிலைக்கு வந்தது. தேர்த்திருவிழா முன்னிட்டு முத்துமாரியம்மன் கோவிலுக்கு நேற்று அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகுகள் குத்தியும் அணி அணியாக வரத்துவங்கினர். பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவு செய்ய வசதியாக கோவில் முன் மூன்று குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் பால்குடம் எடுத்துவந்த சிறு குழந்தைகள் எவ்வித சலனமும் இன்றி பூக்குழி இறங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதுபோன்று ஆறு அடி முதல் 12 அடி வரையிலான அலகுகள் குத்திவந்த பக்தர்களும் பூக்குழி இறங்கிய பின்னரே கோவிலுக்குள் சென்று நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நேற்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. டவுன் டி.எஸ்.பி., கீதா தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நகரின் பல பகுதிகளில் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு விதவிதமான அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லாததால் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது.