பதிவு செய்த நாள்
13
மார்
2012
11:03
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் "நிலாவுக்கு பாரம்பரியமாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் விழா நடந்து. காரைக்குடி, கழனிவாசல், கோட்டையூர், பலவான்குடி, கொத்தரி, பள்ளத்தூர், நேமத்தான்பட்டி, வடகுடி உள்ளிட்ட 16 ஊர்களில் பல நூற்றாண்டுகளாக வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். "பாளைய நாடு என்றழைக்கப்படும் இந்த கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமியையொட்டி நிலாவுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி வடகுடி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட வல்லர் குடும்பத்தை சேர்ந்த மக்கள் ஊர் நடுவே ஒரே இடத்தில் ஒன்றுகூடி இரவு 10 மணிக்கு மேல் நிலாவை பார்த்தபடி பொங்கலிட்டனர். இரவு 11 மணிக்கு மேல் நிலவொளி உச்சிக்கு வந்தவுடன் பெண்கள் ஆனந்தத்துடன் கும்மியடித்து பாட்டு பாடி தங்களது மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் கொண்டனர். பின், வீடுகளில் சமைத்து கொண்டு வந்த பலகாரத்தை பகிர்ந்துண்டும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அக்கிராமத்தை சேர்ந்த பி.ஆர்., அழகப்பன், 60, கூறுகையில், "" எங்கள் சமூகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் விவசாய கூலி வேலை செய்கின்றனர். அறுவடை முடிந்து மாசி மாதத்தில் வரும் நிலாவுக்கு பாரம்பரியமாக விழா எடுப்பது வழக்கம். பாளையநாடு என்றழைக்கப்படும் 16 கிராமங்களில் மட்டுமே இவ்விழா நடக்கும். தங்களை மகிழ்வித்து வரும் நிலாவுக்கு சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே விழா எடுப்பது பெருமையாக உள்ளது, என்றார்.