பதிவு செய்த நாள்
13
மார்
2012
11:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று(13ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி மாத பூஜைகளுக்காக கோவில் நடை மாலை 5.30 க்கு திறக்கப்படும். கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறப்பார். சன்னிதியில் விபூதி அபிஷேகத்தில் தியான நிலையில் இருக்கும் அய்யப்பனை எழுப்பி, நடை திறக்கப்பட்டது தெரிவிக்கப்படும். அன்றைய தினம், வேறு பூஜைகள் ஏதுமிருக்காது. நாளை (14ல்) அதிகாலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். தொடர்ந்து அன்று முதல் மார்ச் 18 வரை தினமும், சகஸ்ரகலச பூஜை, சந்தன அபிஷேகம் (களபாபிஷேகம்) போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் மதியம் 12.30 மணிக்கு பிறகு, முதலில் சந்தன அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தொடர்ந்து சகஸ்ரகலசாபிஷேகம் அய்யப்பனுக்கு செய்விக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நிறைவுற்று, மார்ச் 18 இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து பங்குனி உத்திர உற்சவத்திற்காக, கோவில் நடை மார்ச் 27 மாலை 5.30 க்கு திறக்கப்படும். தொடர்ந்து மறுநாள், கொடியேற்ற நிகழ்ச்சியுடன் உற்சவம் துவங்கும். ஏப்., 5ல் பங்குனி உத்திரம் உற்சவமும், பம்பை நதியில் ஆராட்டு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும் நடைபெறும். இதையடுத்து, அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்படும்.
பெண் பக்தர்களின் கவனத்திற்கு: நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது. அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.