பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
மோகனூர்: மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த, 14ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினமும், கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனிதநீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி, சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். வரும், 20ல் மறுகாப்பு கட்டப்படுகிறது. 21 முதல், இரவு, 7:00 மணிக்கு, சுவாமி ஊர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 26 இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது.
வரும், 27 அதிகாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, காலை, 9:00 மணிக்கு, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
காலை, 10:00 மணிக்கு, சுவாமி பாலப்பட்டி- கொமார பாளையம் காவிரி ஆற்றில் கரகம் பாலிக்கப்பட்டும், பக்தர்கள் புனித நீராடியும், 5 கி.மீ., தூரம் நடந்து வந்து, மதியம், 2:00 மணிக்கு, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இரவு, 8:00 மணிக்கு, வாணவேடிக்கை நடக்கிறது. வரும், 28 காலை, 6:00 மணிக்கு, பொங்கல் வைத்து பூஜை, கிடா வெட்டு நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, 45 அடி உயரம் கொண்ட திருத்தேரில், சுவாமி எழுந்தருளுகிறார். அதையடுத்து, தேரை வடம் பிடித்து இழுத்தபடி, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் செல்கின்றனர். 29 மாலை, 5:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.