பதிவு செய்த நாள்
13
மார்
2012
11:03
மோகனூர்: அரூர் செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். மோகனூர் அடுத்த அரூர் பஞ்சாயத்தில், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மகா கணபதி, கருப்பண்ணசாமி, மதுரை வீரன் ஆகிய ஸ்வாமிகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலை, மிகுந்த பொருட்செலவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவடைந்த நிலையில், கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை மங்கள இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனை, கணபதி, நவக்கிரக ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, முதற்கால யாகபூஜை நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, விநாயகர் வழிபாடு, பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. அதையடுத்து, காலை 6 மணிக்கு மகா கணபதி, செல்லாண்டியம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா அபிஷேகம், சாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.