காரைக்குடி : கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காரைக்குடியில் நடைபெற்றது.
காலை 8:45 மணிக்கு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண்கள் மாவிளக்கு வைத்து அம்பாளை வழிபட்டனர். தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை 8:30 மணி, இரவு 9:00 மணிக்கு காமதேனு, அன்னம், கைலாசம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இரவு 6:30 மணிக்கு மேல் நடந்தது. முன்னதாக காரைக்குடியின் தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து தேரை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் திருத்தேர் சங்கராபுரத்தில் உள்ள காட்டம்மன் கோயிலுக்கு சென்றது. அங்கு வருவோரை வரவேற்கும் விதமாக காட்டம்மன் கோவில் அருகே பெண்கள் விதவிதமான வண்ண கோலங்களிட்டு வரவேற்பு அளித்தனர். அம்பாள் மற்றும் காட்டம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு தேர் காரைக்குடிக்கு திரும்புகிறது. நாளை காலை யானை வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 11:00 மணிக்கு அம்பாள் தெப்ப ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெகன்னாதன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் பிரதீபா செய்திருக்கின்றனர்.