பதிவு செய்த நாள்
22
மே
2019
12:05
சென்னை : சென்னை விமான நிலையம் எதிரே உள்ள, திரிசூலம் மலையில், சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பட்டா நிலங்கள், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள கிராமம் திரிசூலம். மலை மீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவிலால், இந்த ஊருக்கு, திரிசூலம் என, பெயர் கிடைத்தது.இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர்.
அன்னதானம் : பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடக்க, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களை சுற்றிலும் வைத்து பூஜித்ததாகவும், லிங்கத்தை சுற்றி இருந்த நான்கு வேதங்களும், மலைகளாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகிறது.மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே, அங்கிருந்த சிவபெருமானை, திருச்சுரமுடைய நாயனார் என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் திரிசூலநாதரானார்.கோவிலை சுற்றியுள்ள நான்கு மலைகளிலும், கார்த்திகை தீபத்தின் போது, தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு. இக்கோவிலில், சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன், இறகு இல்லாமல் அருள் பாலிக்கிறார். விநாயகரின் ஆறு அவதாரங்களில், மூலாதார சக்தியான குண்டலினி, நாகவடிவில் இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் பிரார்த்தனை தலமாகவும், இக்கோவில் விளங்குகிறது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு சொந்தமாக, நுாறு ஏக்கருக்கும் மேற்பட்ட, பட்டா நிலம் உள்ளது.கோவிலை சுற்றி மட்டும், 80 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கோவிலின் நித்திய பூஜைகள், திருவிழாக்கள், கோவில் முகப்பில் உள்ள சத்திரத்தில், சிவ பக்தர்களுக்கு, எப்போதும் அன்னதானம் வழங்கப்பபட்டு வந்தது.