பதிவு செய்த நாள்
22
மே
2019
12:05
திருப்போரூர்: காயார் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, சுதை சிற்ப நுழைவாயிலுடன், 8லட்சம் ரூபாயில் சுவர் கட்டி, சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின், துணைகோவில்களில் ஒன்றாக, காயார் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலில், சம்ப்ரோக்ஷனம் நடந்தது.
இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் உலாவும் இடமாகவும், ஆக்கிரமிக்கப்படும் நிலையிலும் இருந்தது. இதனால், கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட, காயார் கிராம நற்பணி இயக்கத்தினர் முடிவு செய்தனர்.இதற்காக, அறநிலையத்துறையின், வேலுார் இணை ஆணையர், காஞ்சிபுரம் உதவி ஆணையர் மற்றும் கந்தசுவாமி கோவில் செயல் அலுவலரிடம், பொதுமக்கள் அனுமதி வாங்கினர். இதையடுத்து,8லட்சம் ரூபாயில், சுதை சிற்பங்களுடன் நுழைவாயில் மற்றும் 8 அடி உயர சுற்றுச்சுவரை கட்டி, சுண்ணாம்பு அடித்துள்ளனர். நற்பணி இயக்கத்தினரின் இந்த செயல்பாடு, ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.