பதிவு செய்த நாள்
22
மே
2019
12:05
குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. குளித்தலை, முத்து பூபால சமுத்திரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 5ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
பக்தர்கள் தினமும், கடம்பர்கோவில், பரிசல்துறை காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, கோவிலில் வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் ஊற்றி வழிபட்டனர். அக்னிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த, 19ல் பெரிய பால்குட விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது. நகராட்சி அலுவலகம், பஜனைமடம், கடைவீதி, அக்ரஹாரம் வழியாக, தேர் இழுத்துச் செல்லப்பட்டு, மாலையில் நிலை சேர்ந்தது. அதன் பின், கோவில் முன், ஏற்படுத்தப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், வாய்க்கால்மேட்டு தெருவைச் சேர்ந்த தெய்வானை, 45, திருச்சி மாவட்டம், முசிறி, கோடியாம்பாளையத்தை சேர்ந்த, மாரியம்மன் கோவில் காவலராக பணியாற்றி வரும் ரெத்தினசாமி, 63, ஆகியோர், குண்டம் இறங்கும்போது, தவறி விழுந்து காயமடைந்தனர். இருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.